Archives: ஜனவரி 2018

உறைந்த பனியைப்போல வெண்மை

கடந்த டிசம்பர் மாதத்தில் நான் என் குடும்பத்தோடு மலைப் பகுதிக்குச் சென்றோம். நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுதும் வெப்பமண்டலப் பகுதியிலேயே வாழ்ந்ததால் முதல் முறையாக நாங்கள் உறைந்த பனியையும்  அதன் அற்புத அழகையும் காண முடிந்தது. வெள்ளை போர்வை போர்த்தியதைப் போல காட்சியளித்த வயல் வெளிகளைக் கண்ட எனது கணவர், “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல வெண்மையாகும்” (ஏசா. 1:18) என்ற வசனத்தைக் குறிப்பிட்டார்.

சிவேரென்பதின் அர்த்தம் என்ன என்பதை எங்களுடைய மூன்று வயது மகள் கேட்டதோடு, “சிவப்பு நிறம் கெட்டதா? எனவும் கேட்டாள். பாவம் என்பது தேவன் வெறுக்கும் காரியம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இந்த வசனம் வெறும் நிறத்தை மட்டும் குறிப்பிடவில்லை, இங்கு தீர்க்கதரிசி விளக்குவது என்னவெனின், ஆழ்ந்த சிவப்பு நிறச்சாயம் ஒரு சிறிய பூச்சியின் முட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆடைகள் இந்த ஆழ்ந்த சிவப்பு சாயத்தில் இருமுறை சாயமேற்றப்படுகின்றன. எனவே இந்த நிறம் நிரந்தரமாக ஒட்டிவிடுகிறது. மழையோ, அல்லது எப்படித் துவைப்பதாலேயும் அந்த நிறத்தை எடுக்க முடியாது. பாவமும் அப்படியே தான். மனித முயற்சியால் நம் பாவத்தை நீக்க முடியாது. அது இருதயத்தில் பதிந்து விடும்.

தேவனால் மட்டுமே இருதயத்தை பாவத்திலிருந்து சுத்திகரிக்க முடியும். இந்த மலையைப் பார்க்கும் போது, ஒரு வியத்தகு தூய வெண்மையைக் காண்கிறோம். ஆழ்ந்த சிவப்பில் சாயமிடப்பட்ட ஒரு துணியைத் தேய்ப்பதாலோ அல்லது எந்த நிற நீக்கியினாலோ இந்த தூய வெண்மையைக் கொண்டு வரவேமுடியாது. பேதுருவின் போதகத்தை நாம் பின்பற்றும் போது, ‘உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்” (அப். 3:20) தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு ஒரு புது வாழ்வைத் தருகிறார். இயேசு கிறிஸ்துவின் தியாகம் மட்டுமே நமக்கு ஒரு தூய உள்ளத்தைத் தர முடியும். இது எத்தனை பெரிய ஈவு.

வல்லவரும், அணுகக்கூடியவரும்

என்னுடைய தாயாருக்கு புற்றுநோய் என்ற அறிக்கை வந்த போது, என் கணவர் வேலைக்குச் சென்று விட்டிருந்தார். நான் அவருக்கும், சில நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இச்செய்தியைத் தெரியப்படுத்தினேன். என் முகத்தை நடுங்கும் கரங்களால் மூடிக்கொண்டு “எனக்கு உதவும் கர்த்தாவே” என்று விம்மி அழ ஆரம்பித்தேன். நான் முற்றிலும் தனிமையை உணர்ந்த அந்த நேரத்திலேயே தேவன் என்னோடிருந்து என்னைத் தேற்றி, என்னருகில் இருக்கிறார் என்ற உத்திரவாதத்தை எனக்குத் தந்தார்.

என் கணவர் உடனே வீட்டிற்கு வந்தார். என்னுடைய நண்பர்கள் உறவினரின் ஆதரவும் எனக்குக் கிடைத்தது. நான் தேவனுக்கு நன்றி கூறினேன். எங்கெங்கிருந்தும், எவ்வெப்பொழுதும் நாம் அவருடைய உதவியைக் கேட்கும் போது, தயாராகவும் உண்மையுள்ளவராகவும் வந்து நம்மை அமைதிப்படுத்தும் அவருடைய பிரசன்னத்தை, நான் அந்த முதல் சில மணித்துளிகள் தனிமையாக துயருற்றபோது உண்ர்ந்தேன்.

சங்கீதம் 46ல், சங்கீதக்காரன் தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், அனுகூலமான துணையுமானவர் எனத் தெரிவிக்கின்றார். நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் குழப்பமாக இருப்பதை நாம் உணரும் போதும் நாம் நம்பியிருந்த உறுதி யாவும் நொறுக்கப்பட்ட போதும், நாம் பயப்படத் தேவையில்லை (வச. 2-3) தேவன் தள்ளாடுவதில்லை (வச. 4-7). அவருடைய வல்லமை உண்மையும் செயல் திறனுமுள்ளது. (வச. 8-9) அவர் நம்மை முடிவில்லாமல் காப்பவர். அவருடைய மாறாத தன்மையின் மீது நமக்கு நம்பிக்கையைத் தருகிறார் (வச. 10). நமக்கு உறுதியான பாதுகாப்பாக அவர் எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் (வச. 11).

ஜெபத்தில் ஒருவரையொருவர் தாங்கவும், ஊக்குவிக்கவுமே, தேவனைப் பின்பற்றுகிறவர்களை அவர் உருவாக்கினார். அவர் வல்லவரும், எப்பொழுதும் நமக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறார் என்ற உறுதியை நமக்களிக்கின்றார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நமக்கு உதவி செய்ய, அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என நாம் அவரை நம்பலாம். அவருடைய பிள்ளைகள் மூலமாயும், அவருடைய பிரசன்னத்தாலும் அவர் நம்மைத் தேற்ற வல்லவராயிருக்கிறார்.

ஒரு சிறு குழந்தையைப் போல

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மாலையில் என்னுடைய இரண்டு வயது மகளுடன் இரவு ஜெபத்தை முடிக்கும் போது, என் மகள் என் மனைவியிடம் ஒரு வியக்கத்தக்க கேள்வியைக் கேட்டாள். “அம்மா, இயேசு எங்கேயிருக்கிறார்? அதற்கு என் மனைவி லுஆன், “இயேசு கிறிஸ்து மோட்சத்திலிருக்கிறார், மேலும் அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். இப்பொழுது நம்மோடும் இருக்கிறார். நீ அவரை என் இருதயத்தில் வாரும் என்று அழைத்தால் அவர் உன் இருதயத்திலும் இருக்க முடியும்” என்று கூறினாள்.

“நான் இயேசு என் இருதயத்தில் இருக்க விரும்புகிறேன்.”

“ஒரு நாள் நீ அவரை வரும்படி கேள்.”

“நான் இப்பொழுதே அவர் என் இருதயத்தில் வரும்படி கேட்பேன்.”

எனவே என்னுடைய சிறிய மகள் சொன்னாள், “இயேசுவே, தயவு கூர்ந்து என் இருதயத்தினுள் வாரும். வந்து என்னோடிரும்” அன்று முதல் இயேசுவோடு அவளுடைய விசுவாச பயணம் துவங்கியது.

இயேசுவின் சீடர் பரலோகராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாய் இருப்பான் என்று கேட்டபோது, அவர் ஒரு சிறு பிள்ளையை தம்மிடத்தில் அழைத்து அவர்கள் நடுவே நிறுத்தி (மத். 18:1-2) “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போலாகாவிட்டால் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்… இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். (வச. 3-5) என்றார்.

இயேசுவின் கண்கள் பார்க்கின்ற படியே நாமும் ஒரு நம்பிக்கையுள்ள குழந்தையை நம் விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அவருக்கு தன்னுடைய இருதயத்தைத் திறக்கிற அனைவரையும் வரவேற்க கற்பிக்கப்பட்டுள்ளோம். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். பரலோகராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது” என்று இயேசு சொன்னார் (19:14)

மகிழ்ச்சி

நான் ஒரு புதிய காலநிலையை அடைகிறேன். முதிர்வயதின் குளிர்காலம் இன்னும் அதற்குள் வரவில்லை. ஆனால், நான் இன்னமும் அதை அடையவில்லை. வருடங்கள் வேகமாக குதித்து ஓடிக்கொண்டிருந்தாலும், நான் அவற்றின் வேகத்தைச் சற்று குறைக்க விரும்பினேன். எனக்குள் என்னைத் தாங்குகின்ற மகிழ்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தேவன் எனக்குத் தருகின்ற ஒரு புதியநாள். நானும் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “கர்த்தரைத் துதிப்பதும்… காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்” (சங். 92:1,3) என்று சொல்லுகிறேன்.

என் வாழ்வில் போராட்டங்களும் வேதனைகளும் இருந்த போதிலும், மற்றவர்களின் கஷ்டங்கள் சில வேளைகளில் என்னை மேற்கொள்கின்றன. தேவன் என்னையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து பாட பெலப்படுத்துகிறார்” உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன் (பாடுவேன்) (வச. 4). தேவன் தந்த ஆசிர்வாதங்களுக்காக, நமது குடும்பம், நண்பர்கள், மேலும் திருப்தியளிக்கக்கூடிய வேலை ஆகியவற்றினை அவருடைய எழுச்சியூட்டும் வார்த்தைகளுக்காகவும் மகிழ்ச்சியடைவோம். தேவன் நம்மை அதிகமாக நேசித்ததினால், நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார். நமக்கு மகிழ்ச்சியைத் தந்தார். மெய்யான மகிழ்ச்சியின் மூலக்காரணராகிய பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தார் (ரோம. 15:13). தேவனாகிய கர்த்தராலே “நீதிமான் பனையைப் போல் செழித்திருப்பான்… அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங். 92:12-15).

இந்த கனி என்பதென்ன? நம்முடைய வாழ்க்கைச் சூழல் அல்லது காலம் எப்படியிருந்தாலும், நம்முடைய வாழ்வினாலும் நாம் பேசும் வார்த்தையினாலும் அவருடைய அன்பிற்கு எடுத்துக்காட்டாயிருப்போம். நம் தேவனைத் தெரிந்துகொள்வதும், அவருக்காக வாழ்வதும் அவரைப் பற்றி பிறருக்குச் சொல்வதுமே உண்மையான மகிழ்ச்சி.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பொய்களும் உண்மையும்

 

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் “சத்தியத்தை அறிவோம்”, பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32). 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

 

சரியாய் எதிர்வினையாற்றுங்கள்

கௌரவால் தன் கண்களை நம்ப முடியவில்லை. "அவர்கள் ஏன் இந்த வெள்ளை உடையில் இருக்கும் நல்ல மாமாவை அடிக்கிறார்கள்" என்று எண்ணினான். அவன் இயேசுவைப் போல உடையணிந்த ஒரு நபர் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதையும் , போலி இரத்தம் சொட்டச் சொட்டவும், வீரர்களைப் போல உடையணிந்தவர்களால் சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டான். அது ஒரு சபையின் புனித வெள்ளி பவனி. ஆனால் அந்த காட்சி கௌரவுக்கு மிகவும் நிஜமாக இருந்தது. கௌரவ் ஒரு மனநலிவு நோயாளி, மேலும் அவனது நிலை அவனை மிகவும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் இருக்கும்படி செய்தது. அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அம்மா, தயவு செய்து அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று புலம்பியபடியே அவன் இதயம் இரக்கத்தால் நிறைந்தது.

கௌரவரைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். சிலருக்கு எளிதில் இரக்கம் உண்டாகலாம் என்றாலும், மற்ற நமக்கோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கொலோசெ சபையினர்க்கு தங்கள் பழைய வாழ்க்கை முறையை "அகற்ற" வலுவாக வலியுறுத்தப்பட்டது. அழுக்காகவும் கந்தையாகவும் இருந்த ஆடையைத் தூக்கி எறிவது போல, கோபம், மூர்க்கம் , பொறாமை, வாயில் பிறக்கலாகாத தூஷணம், வம்பு வார்த்தைகள் (வ.8) ஆகியவற்றைக் கொண்டிருந்த தங்கள் உலகத்துக்குரிய சுபாவத்தைக் களைந்துவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாறாக, இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும்நீடிய பொறுமை (V.12)ஆகிய நற்பண்புகளை அணிந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அவை " இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்" (சங்கீதம் 145:8). கொண்ட தங்கள் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கின்றன.

இரக்கம், கருணை, தாழ்மை மற்றும் தயவு ஆகியவை இன்றைய உலகில் பெரும்பாலும் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் இதைத்தான் மற்றவர்கள் நம்மில் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் (வ.12). சக பணியாளர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான நமது அனுதின உறவுகளில் இந்த குணாதிசயங்களுடன் செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாயினும் நாம் சரியாக எதிர்வினையாற்ற உறுதிகொள்ள வேண்டும், ஏனெனில் இந்த வழிமுறையில்தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகம் அறியும் ரெபேக்கா விஜயன்